×

கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சித்சபையை சுற்றிவலம் வந்து நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், கார்த்திகை மாதம் வரக்கூடிய கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வர தொடங்கினர். நடராஜரை தரிசனம் செய்த பின்னர், உள் பிரகாரம், வெளிப்பிரகாரத்தை வலம் வந்தனர். குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்த்து சித்சபையை 21, மற்றும் 108 முறை வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்தனர்.

நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். பின்னர் ஆதி மூல நாதர் மற்றும் சிவகங்கை தீர்த்த குளம் அருகே உள்ள சிவகாமி சுந்தரி அம்பாள் மற்றும் முருகன் சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சோமவாரத்தை முன்னிட்டு கீழ சன்னதி, மேல சன்னதி, வடக்கு வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple ,Chidambaram ,Chitsabha ,4th ,Somavar ,Kartika ,Lord ,Nataraja ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...